நாங்கள் இந்தியா...

நாடே இதயம்... எங்கள் நாடே உதிரம்... நாங்கள் இந்தியா...

Tuesday, April 10, 2012

லண்டன் ஒலிம்பிக்: விஜேந்தர் தகுதி

ஆஸ்தானா: லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு, இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தகுதி பெற்றார்.
கஜகஸ்தானில் உள்ள ஆஸ்தானா நகரில், ஆசிய பிரிவு ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச் சுற்றுப் போட்டி நடக்கிறது. இதன் 75 கி.கி., எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் விஜேந்தர் சிங், மங்கோலியாவின் சுலூன்டுமர் டுமுர்குயாக்கை சந்தித்தார். இதில் அபாரமாக ஆடிய விஜேந்தர் 27-17 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியின்மூலம் லண்டன் ஒலிம்பிக் (ஜூலை 27 - ஆக., 12), குத்துச்சண்டை போட்டிக்கு தகுதி பெற்றார்.

மூன்றாவது முறை:
இதன்மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு மூன்றாவது முறையாக தகுதி பெற்ற முதல் இந்திய குத்துச்சண்டை வீரர் என்ற புதிய வரலாறு படைத்தார். ஏற்கனவே இவர், 2004 (ஏதென்ஸ்), 2008ல் (பீஜிங்) நடந்த ஒலிம்பிக்கில் விளையாடினார். இதில் 2004ல் முதல் சுற்றோடு வெளியேறிய இவர், 2008ல் வெண்கலம் வென்று சாதனை படைத்தார். தவிர இவர், கடந்த ஆண்டு நடந்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலம் வென்றார். 

இதன்மூலம் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்திய குத்துச்சண்டை வீரர் என்ற சாதனை படைத்தார்.
ஐந்தாவது வீரர்:
தவிர இவர், லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற ஐந்தாவது இந்திய குத்துச்சண்டை வீரரானார். ஏற்கனவே கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் தொடரில் அசத்திய இந்தியாவின் தேவேந்திரா சிங் (49 கி.கி.,), ஜெய் பகவான் (60 கி.கி.,), மனோஜ் குமார் (64 கி.கி.,), விகாஸ் கிருஷ்ணன் (69 கி.கி.,) ஆகியோர் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றனர்.

இதுகுறித்து விஜேந்தர் கூறுகையில், ""மூன்றாவது முறையாக ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம் என் மீதான விமர்ச்சனங்களுக்கு பதில் கொடுத்துவிட்டேன். இனி லண்டன் ஒலிம்பிக் போட்டி மீது அதிக கவனம் செலுத்த உள்ளேன்,'' என்றார்.

No comments:

Post a Comment