பெங்களூர் கால்பந்து வீரர் வெங்கடேஷ் (வயது 22) களத்தில் விளையாடும் போதே மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.பெங்களூர் மார்ஷ் அணிக்கும் தென்மேற்கு ரெயில்வே அணிக்கும் இடையே நடந்த இந்த போட்டியின் போது 70வது நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரராக வெங்கடேஷ் களம் இறங்கினார்.அவர் களம் இறங்கிய 2வது நிமிடத்தில் மைதானத்தில் மயங்கி விழுந்தார்.மைதானத்தில் ஆம்புலன்ஸ் எதுவும் இல்லாததால் ஆட்டோவில் அவரை ஹோஸ்பட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்-.ஆனால் வரும் வழியிலேயே அவர் மரணம் அடைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.பிரேத பரிசோதனையில் வெங்கடேஷ் கடும் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார் என தெரிய வந்ததுள்ளது.
வெங்கடேஷின் மரணம் குறித்து பேட்டியளித்த கர்நாடக கால்பந்து சங்கத் தலைவர் கலீல் கூறுகையில்,'' மாற்று ஆட்டக்காரராக பெஞ்சில் இருந்த வெங்கடேஷ் களம் இறங்கும் முன்னரே வாந்தி எடுத்துள்ளார்.எனவே அவரை களம் இறக்க பயிற்சியாளர் யோசித்துள்ளார். அந்த சமயத்தில் வெங்கடேஷின் தந்தை அல்லது மாமா யாரோ ஒருவர் அவரை களம் இறக்கும்படி பயிற்சியாளரைவற்புறுத்தியுள்ளனர். இதையடுத்தே அவரை பயிற்சியாளர் களம் இறக்கியுள்ளார். உடல்நிலை சரியில்லாத நிலையில் வெங்கடேஷை களம் இறக்கியது அவரது மரணத்திற்கு காணரமாகி விட்டது'' என்றார்.
ஆனால் கர்நாடக கால்பந்து சங்கத் தலைவரின் இந்த கருத்துக்கு வெங்கடேஷின் தந்தை தன்ராஜ் கடும் மறுப்பு தெரிவித்துள்ளர். அவர் கூறுகையில்,''எனது மகனுக்கு உடல்நிலையில் எந்த பாதிப்பும் இல்லை. பெஞ்சில் இருக்கும் போது வெங்கடேஷ் வாந்தி எடுத்ததாக சொல்வது சுத்த பொய். இவ்வளவு பெரிய மைதானத்தில் ஒரு ஆம்புலன்ஸ் இல்லை. மருத்துவக் குழு இல்லை.இதுவே எனது மகன் சாவுக்கு காரணமாகி விட்டது. எனது மகனது இறப்புக்கு இழப்பீடாக ரூ. ஒரு லட்சம் தருகின்றனர். இந்த பணம் எனக்கு தேவையில்லை. தெருவில் இறந்து கிடந்தால் கூட இந்த பணம் கிடைத்து விடும். எனது மகன் இறப்புக்கு கர்நாடக கால்பந்து சங்கமே காரணம். கர்நாடக கால்பந்து சங்க நிர்வாகிகள் மீது போலீசில் புகார் கொடுக்கப் போகிறேன்'' என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே வெங்கடேஷின் மரணம் குறித்து அகில இந்திய கால்பந்து சம்மேளனமும் தனது விசாரணையை துவக்கியுள்ளது.

No comments:
Post a Comment