கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு கால்பந்து மைதானத்தில் சுருண்டு விழுந்த மரணமடைந்த மொரோசினி என்ற கால்பந்து வீரரின் வாழ்க்கையும் சோகமயமானதாகவே உள்ளது.
இத்தாலியில் நடைபெற்ற சீரி பி போட்டியின் போது லிவர்னோ அணிக்காக விளையாடிய பியர்மரியோ மொரோசினி விளையாடிக்கொண்டிருக்கும் போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு தடுமாறி விழுந்தார். பின்பு இரு முறை எழ முயன்று முடியாமல் மரணமடைந்தார்.
அவரது மரணம் மைதானத்திலிருந்த பல வீரர்களுக்கும் கண்ணீரை வர வைத்தது. 25 வயதான மொரோசினி மைதானத்தில் உயிர் விட்ட காட்சி ஊடகங்களிலும் ஒளிபரப்பப்பட்டது. இதனை பார்த்த கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் மிகுந்த மன வேதனைக்குள்ளானார்கள்.
இந்த இளம் வீரரின் வாழ்க்கையே சோகம் நிரம்பியது என்று பலருக்கும் தெரியாது.
இத்தாலியின் பிரபல உடினிஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த மொரோசினி சமீபத்தில் சீரி 'பி' அணியான லிவர்னோ அணிக்காக விளையாடினார். லிவர்னோ அணி பெஸ்காரா அணியை எதிர்த்து விளையாடும் போது களத்திலேயே அவரது உயிர் பிரிந்தது.
இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த மொரோசினிக்கு ஒரு ஊனமுற்ற சகோதரரும், ஊனமுற்ற சகோதரியும் உண்டு. பெற்றோரை இழந்த இவரது ஊனமுற்ற சகோதரர் தற்கொலை செய்து கொண்டார். பின்பு ஊனமுற்ற தன் சகோதரியை மொரோசினி தன்னுடன் வைத்து மிக அன்பாக கவனித்து வந்தார்.
ஆனால் மொரோசினியின் மரணத்தால் தற்போது ஆதரவில்லாமல் போன அவரது சகோதரிக்கு உதவி செய்ய உடினிஸ் அணி முன் வந்துள்ளது.
இது குறித்து உடினிஸ் அணித்தலைவர் ஆன்டானியா டி நடாலி கூறுகையில், மொரோசினியின் சகோதரியை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு உடினிஸ் அணிக்கு உள்ளது. அவருக்கு தற்போது எந்த ஆதரவும் இல்லை என்பதை உடினிஸ் உணர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.
சோகத்திலேயே வாழ்க்கை நடத்தி வந்த முரோசினியின் இறப்பும் கால்பந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திவிட்டது. லிவர்னோ அணிக்காக முரோசினி 25ம் எண் ஜெர்சி அணிந்து விளையாடி வந்தார்.
அவரது மரணத்தையடுத்து லிவர்னோ 25ம் எண் ஜெர்சிக்கு ஓய்வுகொடுக்க முடிவு செய்துள்ளது. இனிமேல் லிவர்னோ அணிக்காக விளையாடும் எந்த வீரருக்கும் 25ம் எண் ஜெர்சி வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment