ஐ.பி.எல் தொடருக்கான ஏலத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு பல கோடிகள் வாரி வழங்கப்பட்டன. ஆனால் ஹொக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்) தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு சில லட்சங்கள் தான் கொடுக்கப்பட்டன.
இந்திய அணித்தலைவர் சர்தார் சிங் அதிகபட்சமாக ரூ. 42.49 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இது தேசிய விளையாட்டாக கருதப்படும் ஹொக்கிக்கு மிகப் பெரிய அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் போல உள்ளூர் ஹொக்கி அணிகள் பங்கேற்கும் ஹொக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்) தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 17ம் திகதி முதல் பிப்ரவரி 17ம் திகதி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் டெல்லி, மும்பை, உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து ஐந்து அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான வீரர்கள் ஏலம் டெல்லியில் நேற்று நடந்தது. சுமார் 200 பேருக்கு மேல் ஏலம் விடப்படும் வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றனர்.
ஒரு வீரருக்கான அடிப்படை விலை அதிகபட்சமாக ரூ. 13.5 லட்சம், குறைந்த பட்சமாக ரூ. 1.5 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. ஒரு அணியில் மொத்தம் 24 வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம். இதில் 10 வெளிநாட்டு வீரர்களும், 14 இந்திய வீரர்களும் இடம் பெற வேண்டும்.
நேற்று நடந்த ஏலத்தில் இந்திய அணித்தலைவர் சர்தார் சிங்கை ஒப்பந்தம் செய்ய போட்டி நிலவியது. இறுதியில் டில்லி வேவ்ரைடர்ஸ் அணி ரூ. 42.49 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்தது. இதன்மூலம் அதிக விலைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார்.
இருப்பினும் ஐ.பி.எல்., தொடருக்கான வீரர் ஏலத்தை ஒப்பிடும் போது 10 மடங்கு குறைவு. அதாவது இந்த ஆண்டு ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரவிந்திர ஜடேஜாவை சுமார் 9.72 கோடிக்கு ஏலம் எடுத்தது.
சர்வதேச போட்டிகளில் விளையாடாத இளம் வீரர்கள் கூட ரூ. 50 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
இவரை அடுத்து ரகுநாத்தை உத்தர பிரதேச விசார்ட்ஸ் அணி ரூ. 41.40 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்தது. மற்றொரு இளம் வீரர் ருபிந்தர் பால் சிங்கை டெல்லி வேவ்ரைடர்ஸ் அணி ரூ. 30.48 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்தது.
பெனால்டி கார்னர் ஸ்பெஷலிஸ்ட் சந்தீப் சிங், மும்பை மெஜிசியன்ஸ் அணியால் ரூ. 15.13 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
மற்ற இந்திய வீரர்களான எஸ்.வி. சுனில் (ரூ. 22.86 லட்சம், டெல்லி வேவ்ரைடர்ஸ்), இக்னேஸ் டிர்கே (ரூ. 16.87 லட்சம், பஞ்சாப் வாரியர்ஸ்), குர்விந்தர் சிங் சாண்டி (ரூ. 27.24 லட்சம், டெல்லி வேவ்ரைடர்ஸ்), சர்வன்ஜித் சிங் (ரூ. 18 லட்சம், ராஞ்சி ரிகினோஸ்) ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
இளம் வீரர்களான ஐயப்பா (ரூ. 11.43 லட்சம்), குர்பாஜ் சிங் (ரூ. 19.60 லட்சம், ராஞ்சி ரிகினோஸ்), கோதாஜித் சிங் (ரூ. 17.42 லட்சம், ராஞ்சி ரிகினோஸ்), அமித் ரோகிதாஸ் (ரூ. 15.78 லட்சம்) ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
வெளிநாட்டு வீரர்களின் அதிகவிலைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டவர்கள் வரிசையில் ஜேர்மனி அணியின் அணித்தலைவர் மோரிஸ் புயர்ட்ஸ் (ரூ. 41.10 லட்சம், ராஞ்சி ரிகினோஸ்) முதலிடம் பிடித்தார்.
இங்கிலாந்து வீரர் ஆஷ்லே ஜாக்சன் ரூ. 39.77 லட்சத்துக்கு ராஞ்சி ரிகினோஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். நெதர்லாந்து அணியின் அணித்தலைவர் டியன் டி நோய்ஜர் உத்தர பிரதேச விசார்ட்ஸ் அணிக்காக ரூ. 35.93 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
அஸ்திரேலியாவின் ஜமி டுவையரை, பஞ்சாப் வாரியர்ஸ் அணி ரூ. 31.03 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. பாகிஸ்தானின் முகமது ரஷித், மும்பை மேஜிசியன்ஸ் அணிக்காக ரூ. 22.32 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.